OnlinePJ

Thanks for Visiting my Page

வியாழன், 13 ஜனவரி, 2011

இஸ்லாமிய சகோதரியிடம் இரண்டே கேள்விகள்??

Subject: fardha


www.tamizachi.com - ல் வந்த கவிதைகளில் தமிழச்சியால் எழுதப்பட்ட கவிதை இது

இதர்கான எனது பதில் அவர்கள் இணையதளத்திற்கு அனுப்பியுள்ளேன்...

இதோ...

இஸ்லாமிய சகோதரியிடம் இரண்டே கேள்விகள்??




பர்தாவுக்குள்
சிறைபட்டிருக்கும்
பரிதாபப்பெண்ணே...
உன்னிடம் இரண்டே கேள்விகள்.

இஸ்லாமிட்ட விலங்கை
இன்முகமாய் ஏற்றிருக்கும்
ஏமாளிப்பெண்ணே...
உன்னிடம் இரண்டே கேள்விகள்.

கேள்வி 1

ஆண்களின் பார்வை உன்னை
ஆக்கிரமிக்க கூடாது என்பதுதானே
பர்தாவின் உள்ளர்த்தம்?

சரி, அது
இந்து மத ஆணா?
இஸ்லாமிய ஆணா?
கிறிஸ்துவ ஆணா?

எந்த ஆணின் பார்வை
எப்போதும் உன்மீது படக்கூடாதென
எடுத்துச் சொல்லப்பட்டதா உன்னிடம்?
விடை உண்டா உன்னிடம்?

இதுவரை கண்களால் கற்பழிக்கப்படவில்லை என
இறுமாப்பு வேண்டாம்.

அப்படி கர்பழிப்பவன் உன் மதத்திலும்
ஆயிரம் உண்டு.
அதனால்தான் இந்த கட்டுப்பாடு
அறிவாய் நீயும்.

கேள்வி: 2

ஆணுக்காரு நீதி பெண்ணுக்காரு நீதியா?
ஆண்டவனின் கட்டளையில்
நீ மட்டும் அடிமையா?

றமளான் மாதத்தில் மட்டும்
ஆண்களும் அணியவேண்டும்
அந்த பர்தாவை என ஒரு
அறிவிப்பு வந்தால்
ஏற்றுக்கொள்வார்களா உனது
அன்புச்சகோதரர்கள்?

அந்த நாட்களில் மட்டுமாவது
அவர்களுக்கு கற்பு
அவசியம் இல்லையா சகோதரி?

போதுமா கேள்விகள்
பொறுமையாய் கேட்டால்
யோசிக்க வைக்கும் என் கேள்விகள்...
விடை சொல்லுமுன் அந்த
விலங்கை ஒதுக்கி வை சகோதரி!

தமிழச்சி
02.08.2010

(சிறு குறிப்பு: பிரான்ஸ் நாட்டில் பர்தா அணிவது தடை செய்யப்பட்ட சட்டமாக அறிவிக்கப்பட்டதை முன் வைத்து தற்போது தமிழக இலக்கியத்தில் சில விவாதங்கள் நடைபெறுகின்றன. தோழர் குமரேசன் அசாக் “பெண்ணே நீ” பத்திரிக்கையில் எழுதிய கட்டுரையை முன் வைத்து திருமதி.ஜெஸிலா பர்தாவுக்கு ஆதரவாக ஒர் கவிதையை பதிலாக கூறியிருந்தார்.
அக்கவிதைக்கு எதிர்விணையாக இக்கேள்வி எழுப்பப்படுகிறது)

-------------------------------------------------------------------------------------------------------------------------


இது தமிழச்சி இணைய தளத்தில் தமிழச்சியால் எழுதப்பட்டிருக்கும் கவிதை வரிகள்...


இதோ எனது பதில் தமிழச்சிக்கு......

எனது சமுதாயமும் எனது சகோதரிகளும் மன்னிக்கவும்... தவறுகள் இருப்பின்...


இது நவீன பெண்ணீயம் பேசும்
சல்மாக்களின் காலம்,
தமிழச்சிகளின் காலம்

பெண்ணின் மீது அவள்
ஆணின் பார்வை
கண்டிப்பாக படவேண்டும்
அன்னிய ஆண்களின் பார்வையல்ல...

அன்னிய ஆண்களின் பார்வை
என்று இஸ்லாம் சொன்னபோது
அன்னிய மதத்தை சாடவில்லை
கூடவே எந்த மத ஆண்களையும்...

என் மனைவி பர்தாவுக்குள்
அடைபட்டுப்போவதால்
தமிழச்சியின் மானம்
கழைந்துபோக வாய்ப்பில்லை

இடுப்போ கழுத்தோ
மார்போ மறைவிடங்களோ
எனது மட்டுமாய் ஆன அவைகளை
என்னவள் எனக்கு மட்டும் காண்பித்தால்
அது இஸ்லாம்,

எல்லோருக்கும் காட்சிவைத்தாலே
அது சுதந்திரப்பெண் என்றால் அது
எந்த மதமென்று அறியத்தருவது
தமிழச்சிக்கு உத்தமம்...

ஒருபோதும் நிர்பந்தித்ததில்லை
இஸ்லாம் எதையும் – ஏற்றுக்கொள்வதும்
மறுப்பதும் அவரவர் நம்பிக்கை
முஸ்லிமல்லாதபோது....

கடற்கரை மணலில் பதிக்கப்படும்
காலடித்தடங்கள் ஒரு போதும்
நினைவுச்சின்னங்களாவதில்லை,
எப்போதாவது அவைகள் அலைகளால்
அடித்துச் செல்லப்படாமலிருப்பதில்லை
என்பதால்.....


றமளானோ ஆகஸ்டோ
இஸ்லாம் அணியச்சொன்னால்
ஒரு ஆணாய் பர்தா மட்டுமல்ல
அதற்கு மேலும் அணிவான்...

திறந்துகாட்டச் சொன்னதில்லை
இஸ்ஸலாம்
இச்சைகளை ஒருபோதும்
ஆணாயினும் அன்னிய
பெண்ணாயினும்...

ஆட்சிக்குத்தான் ஆண்கள்,
அழகு காட்சிக்கு
வைக்கப்படுவதில்லை...


காட்சிக்கோ ஆட்சிக்கோ
ஆண்கள் வெறும் அரை டிராயரும்
மார்புக்கச்சையுமாய் வருவதில்லை
வந்தால் யாரையும் கவர்வதுமில்லை...

எமை வளர்த்த இஸ்லாம்
எதையும் குறையாய் தரவில்லை,
இஸ்லாம் கொண்ட பெண்டிர்
யாரும் குறைவாய் திரியவில்லை
வீதியில்.....

பாதுகாத்து வைத்தால்தான்
அது பொக்கிஷம்...
கடைவீதிகளில் விற்றால்
அதற்கு பெயர் வேறு....


இஸ்லாம் பெண்டிருக்குரிமைகள்
கொடுத்ததுபோல் இனி ஒரு
உலகும் கொடுக்காது....

ரோமங்களோடு பிறந்ததால்தான்
மிருகங்கள் நிர்வாணம் அறிவதில்லை
அவைகளில் யாரும் காமம்
உணர்வதுமில்லை...

ஆணிடம் மறைக்க
உடலில் சிலது மட்டும் – ஆபத்தான
பெண்ணுடலில் அன்னிய ஆணுக்கு
யாரென்று பார்த்தறிய
முகம் மட்டு போதாதோ....

படித்தறிவீர் தமிழச்சிகளே
இஸ்லாமிய பெண்ணீயம்,
ஒரு குறை கொணர்ந்தால்
நீவிர் சொல்வகை செய்வேன்...

தமிழச்சிக்கு ஒரு கேள்வி
ஒரே ஒரு கேள்வி...

ஒரு முறை, ஒரே ஒரு முறை
உடல் உறுப்புக்களின் உணர்ச்சிகளை
யாதார்த்தமாய் உணர்ந்து பாருங்கள்
ஒரு பெண்ணாய்
உணர்ச்சிகள் மரித்துப்போகவில்லையென்றால்....

சகோதரன்

குளச்சல் அபூ ஃபகத்

தம்மாம்
சவூதி அரேபியா

கருத்துகள் இல்லை: