OnlinePJ

Thanks for Visiting my Page

ஞாயிறு, 12 டிசம்பர், 2010

புதிதாக உருவாகிறது – நபி(ஸல்) பற்றிய சர்வதேசத் திரைப்படம்!

இறைத் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் வாழ்க்கையை உரிய ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டும் ஆவணமாக பெரும் பொருட்செலவில் புதியதோர் ஆங்கிலத் திரைப்படம் உருவாகிறது.


“இறுதித் தூதர் நபி(ஸல்) அவர்களின் பிறப்பிற்கு முன்பு துவங்கி, நபியவர்களின் மரணம் வரையிலான முழுமையான தொகுப்பான இத்திரைப்படம், நபியவர்கள் பற்றி தவறாக புரிந்து கொள்ளப்பட்ட எண்ணங்களையும், காழ்ப்புணர்ச்சியுடன் திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வரும் அனைத்து அவதூறுகளையும் களையும்!” என்கிறார் அஹ்மது அப்துல்லாஹ் அல் முஸ்தஃபா. இவர் கத்தர் நாட்டின் தலைநகரான தோஹாவில் அல் நூர் ஹோல்டிங் நிறுவனத்தின் தலைவராவார்.

வளைகுடா நாட்டின் முக்கிய நாடுகளில் ஒன்றான கத்தரிலுள்ள முன்னணி ஊடக நிறுவனமான அல்நூர் ஹோல்டிங் இந்தத் திரைப்படத்தினைத் தயாரிக்கிறது. சுமார் 150 மில்லியன் அமெரிக்க டாலர் பொருட்செலவில் எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு துவங்கவிருக்கும் இத்திரைப்படம், 25 முதல் 30 மாதங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

“ இத்திரைப்படம், சர்வதேச அளவில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் மீது பிற மதத்தவர் மட்டுமின்றி இஸ்லாத்தின் அடிப்படையைச் சரியாக விளங்காத முஸ்லிம்களும் இஸ்லாம் மீது கொண்டுள்ள தவறான எண்ணங்களைக் களையும் முகமாக விளங்கும்!” – அப்துல்லாஹ். ”

திரைப்படத் தயாரிப்புக் குழுவிற்கான தேவைக்காக அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் உள்ள திறமையான படத் தயாரிப்புக் நிறுவனங்களைத் தேர்வு செய்து கொண்டு வருகிறது அல் நூர் ஹோல்டிங் நிறுவனம். இப்படத்தைத் தயாரிக்க அமெரிக்கத் தயாரிப்பாளரான பேர்ரி எம். ஆஸ்போர்ன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், உலகமெங்கும் சிறார்கள் மனதையும் பல ஆஸ்கர் பரிசுகளையும் அள்ளிச் சென்ற “The Lord of the Rings: The Return of the King”படத் தயாரிப்பாளராவார். இத்திரைப்படத்திற்காக இவருக்கு Academy Award for Best Picture விருது கிடைத்திருப்பது குறிப்பிடத் தக்கது. மேலும் புகழ் பெற்ற The Matrix படத்தினைத் தயாரித்தவரும் இவரே.

“ஆங்கிலம் பேசும் முஸ்லிம்களை மட்டுமே கொண்டு இத்திரைப்படம் தயாரிக்கப்படும். இத்திரைப்படம், சர்வதேச அளவில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் மீது பிற மதத்தவர் மட்டுமின்றி இஸ்லாத்தின் அடிப்படையைச் சரியாக விளங்காத முஸ்லிம்களும் இஸ்லாம் மீது கொண்டுள்ள தவறான எண்ணங்களைக் களையும் முகமாக விளங்கும்!” என்கிறார் அப்துல்லாஹ்.

இத்திரைப்படம் பற்றி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ள டாக்டர். யூஸுப் அல் கர்ளாவி, “இத்திரைப்படம் ஒரு இஸ்லாமிய தஃவா (அழைப்பு) ஆகும்” என்று தெரிவித்துள்ளார். இந்தத் திரைப்படத் தயாரிப்பின் டெக்னிக்கல் கன்ஸல்டண்ட் மற்றும் முழு மேற்பார்வையையும் இவரே கவனிக்கிறார்.

இத்திரைப்படத்தின் உரைகள் (ஸ்க்ரிப்ட்), படப்பிடிப்பு மற்றும் தயாரிப்பு ஆகியவற்றின் மேற்பார்வையாளராக டாக்டர் யூஸுப் அல் கர்ளாவியும், அவர் தலைமையில் ஒரு இஸ்லாமியக் குழுவும் அமைக்கப் படவுள்ளது என்கிறார் அப்துல்லாஹ்

இத்திரைப்படம், உலகெங்கும் தவறான புரிதல்களுக்குப் பதிலடியாக பெரும் தாக்கத்தையும் கூடவே மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தும் என்கிறார் சர்வதேச முஸ்லிம் அறிஞர்களுக்கான ஒன்றியத்திற்குத் தலைவரான டாக்டர். யூஸுப் கர்ளாவி

கடந்த 2005 ஆம் ஆண்டு டென்மார்க்கின் ஜில்லண்ட்ஸ் போஸ்டன் என்ற பத்திரிகை 12 கார்ட்டூன்களை தனது தினசரியில் வெளியிட்டிருந்தது. இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் அங்கீகாரத்திற்கும் சற்றும் தொடர்பில்லாத அவதூறுகளைச் சுமத்தி இழிவு படுத்தும் எண்ணத்துடன் அப் பத்திரிகை கார்ட்டூன்கள் வெளியிட்டதைத் தொடர்ந்து உலகமெங்கும் முஸ்லிம்கள் கொந்தளித்தனர்.

பெரும் எண்ணிக்கையிலான பேரணிகள், ஊர்வலங்கள் மற்றும் சர்வதேச மீடியா சாதனங்கள் மூலம் முஸ்லிம்களின் கண்டனங்களும், எதிர்ப்புகளும் பதிவு செய்யப் பட்டன. அது நாள் வரை இஸ்லாத்திற்கு எதிராக திரைமறைவில் இருந்து நடந்து வந்த சூழ்ச்சிகளும், உலகெங்கும் இஸ்லாம் மீது வலிந்து பரப்பப் பட்டு வந்த இஸ்லாமோஃபோபியாவின் ஒட்டுமொத்த உருவமும் வெளியானது. அத்துடன் இஸ்லாத்தின் மீதான பொய்ப்பிரச்சாரத்தை முறியடித்து, இஸ்லாம் பற்றிய அறிவை முழு அளவில் உலக மக்களுக்கு எடுத்துச் சொல்லும் பொறுப்பு ஒவ்வொரு முஸ்லிம்கள் மீது சாட்டப் பட்டிருப்பதை உணர்ந்தனர்.

அதனைத் தொடர்ந்த உலகமெங்கும் “இறைத்தூதரை அறிந்து கொள்” எனும் வகையிலான இஸ்லாமிய பிரச்சாரங்கள் பெருமளவில் முஸ்லிம்களால் நடத்தப்பட்டு வருகிறது. இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களை இழிவு படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்ட டென்மார்க்கிலேயே 27 பெரும் முஸ்லிம் அமைப்புகள் ஒன்றுகூடி European Committee for Honoring the Prophet என்ற பெயரில் வலுவான ஒன்றியத்தை அமைத்திருக்கிறது.

இஸ்லாத்தின் மீதும் இறைத்தூதர் மீதும் உலகமெங்கும் திட்டமிட்டு பரப்பப்பட்டு வரும் தவறான எண்ணங்களுக்கான ஒரு சரியான மறுமொழியாக இத்திரைப்படம் அமையும் என்று நாமும் எதிர்பார்ப்போம்.


நன்றி இஸ்மாயில் பரங்கிபேட்டை

கருத்துகள் இல்லை: