உட்பொதிக்கும் படங்கள் 1

ந்த ஆட்சி வந்தாலும் நஷ்டத்தில் இயக்கம் ஒரே துறை போக்குவரத்துத்துறை தான். இத்துறையின் நஷ்டத்தை ஈடுகட்ட பேருந்து கட்டணத்தை உயர்த்தி மக்களின் அதிருப்தியை கட்டிக்கொண்டது தமிழக அரசு. போக்குவரத்து கழகங்களின் இந்த நஷ்டத்திற்கு காரணம், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு மற்றும் வாகன உபகரணங்களின் விலை உயர்வு- ஊழியர்களின் சம்பள உயர்வு போன்ற காரணங்கள் கூறப்பட்டாலும் உண்மையான காரணம் என்னவோ போக்குவரத்து கழகங்களில் பணிகள் முறையாக நடக்கவில்லை என்பதுதான். 

இதை உண்மைப்படுத்தும் வகையில் அரசு மேற்கொண்ட ஒரு ஆய்வு முடிவு நமக்குச் சொல்கிறது. 
அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களிலும் டிரைவர்கள், கண்டக்டர்கள், தொழில்நுட்ப ஊழியர்களின் எண்ணிக்கை, அவர்களில் தவறாமல் வேலைக்கு வருபவர்கள், பணிக்கு வராமல் இருப்பவர்கள் போன்றவர்களை ஆய்வு செய்யும்படி அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டது. இதுபற்றிய கணக்கெடுப்பு நடந்தது. அப்போது முழுமையாக பணிக்கு வந்தவர்கள் எத்தனை பேர்? குறைந்த நாட்கள் மட்டுமே பணிபுரிந்தவர்கள் எத்தனை பேர் என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டன. 

அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை; 1 லட்சத்து 30 ஆயிரம் பேர். இவர்களில் கடந்த 2011 ஜூன் மாதம் முதல் 2012 ஜூன் மாதம் வரை ஒரு ஆண்டில் வெறும் 80 நாட்கள் மட்டுமே பணிபுரிந்தவர்களின் எண்ணிக்கை 2,354 .
கடந்த ஒரு ஆண்டில் ஒரு நாள் கூட வேலைக்கு வராதவர்களின் எண்ணிக்கை;795 .

அரசு போக்குவரத்துக்கழக டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் ஊழியர்கள் வார விடுமுறை நாட்கள் 52.
இது தவிர ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாட்கள் 33. 
மருத்துவ விடுப்பு 18 நாட்கள். 
தற்செயல் விடுப்பு 18 நாட்கள்.
பண்டிகை நாள் விடுமுறை 10 நாட்கள் என வருடத்துக்கு மொத்தம் 125 நாட்கள் விடுமுறை உள்ளது.
மீதியுள்ள 240 நாட்கள் மட்டுமே இவர்கள் பணிபுரிய வேண்டும். இந்த குறைந்த நாட்கள்கூட பல ஊழியர்கள் வேலைக்கு வராததால்தான் போக்குவரத்து துறையில் பணிகள் பாதிப்பு அடைகிறது என்று அதிகாரிகள் ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

இவர்கள் அனைவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவர்களில் 200 பேர் சென்னை மாநகர போக்குவரத்து கழக ஊழியர்கள். நோட்டீஸ் பெற்ற ஊழியர்களிடம் இருந்து உரிய விளக்கம் வராவிட்டால், அவர்களை டிஸ்மிஸ் செய்யும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இப்படி வேலைக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு ஓய்வெடுத்த இவர்கள் நிச்சயம் ஊதியம் பெற்றிருப்பார்கள். வேலை செய்யாமல் இவர்கள் பெற்ற ஊதியங்கள் மற்றும் சலுகைகளை அரசு திரும்பப்பெற வேண்டும். மேலும்  அபராதமும் விதிக்கவேண்டும். ஊழியர்களை கண்காணிக்கவேண்டிய அதிகாரிகளின் அலட்சியத்திற்காக அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். போக்குவரத்துத்துறை அமைச்சர்,  அதிகாரிகள் தந்த அறிக்கையை அவையில் படிப்பதோடு நின்றுவிடாமல் அவ்வப்போது அதிரடி சோதனைகள் நடத்தி தவறிழைப்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். அப்போதுதான் போக்குவரத்துத் துறையாக இருக்கும். இல்லையேல் போக்குக் காட்டும் துறையாக மாறிவிடும் என்பதை அமைச்சர் உணர்ந்துகொள்ளவேண்டும். மேலும் போக்குவரத்துறை மட்டுமன்றி அனைத்து துறைகளிலும் இத்தகைய அதிரடி தொடங்க வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.