OnlinePJ

Thanks for Visiting my Page

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

உணவுக்காக... ஒரு உலக மகா யுத்தம்.

உலகம் இதுவரை இரண்டு உலகப் போர்களை சந்தித்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜெர்மன், இங்கிலாந்து உட்பட ஏராளமான நாடுகள், இந்தப் போர்களில் பங்கேற்றன. நிலத்திற்காகவும், அதிகார பலத்தை நிரூபிக்கவும் மட்டுமே இவை நடந்தன. 1945ம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்த பின்னர், எந்த நாடுமே பெரிய அளவில் சண்டைக்கு தயாராகவில்லை. ஆனால் மூன்றாவதாக ஒரு உலகப் போர் ஏற்படப் போவதாக வரலாற்று ஆசிரியர்களும், நிபுணர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதுவும் உணவுக்காக போர் என்பது பெரிய கொடுமை. தங்கள் நாட்டில் ஏற்படும் உணவு பஞ்சத்தை தீர்ப்பதற்காக எல்லா நாடுகளும் இந்த யுத்தத்தில் ஈடுபடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஒவ்வொரு நாடும் வளர்ச்சி அடைவதற்காக பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்றன. தொழில் துறையில், பண பலத்தில் தன்னிறைவு பெறுவது மட்டுமே வளர்ச்சி என்று நினைத்து, அதற்காக கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இதற்காக அவர்கள் முதலில் அழிப்பது விவசாய நிலத்தையும், இயற்கை வளங்களையும்தான். நாட்டின் வளர்ச்சிக்காக இன்று இயற்கையை அழிக்கும் நாடுகள், வரும் காலங்களில் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க உள்ளன. விவசாய நிலங்களின் அளவு குறையும்போது உணவு உற்பத்தியும் தானாகவே குறைந்து விடும். இதனால் நாட்டில் உணவு பஞ்சம் ஏற்படும். நவீன விவசாயம் மூலம் உற்பத்தியை பெருக்கினாலும், இயற்கைக்கு ஈடுகொடுக்க முடியாத நிலை ஏற்படும். இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலைக்கு ஒரு கிலோ அரிசி விற்கப்படும். அதையும் கொடுக்க மக்கள் தயாராக இருந்தாலும் அரிசி கிடைக்காது. இந்த நிலை அரிசிக்கு மட்டுமல்ல, அனைத்து உணவுப் பொருட்களுக்கும்தான். இதுபோன்ற நிலை வரும்போது மக்கள் அனைவரிடமும் தங்கம் அதிகமாக இருக்கும். ஆனால் உணவுப் பொருட்கள் இருக்காது.

இப்போது மிகப்பெரிய பிரச்னைகளாக பேசப்படும் அணுசக்தி, எரிபொருள் போன்றவை அனைத்து நாடுகளிடமும் இருக்கும். ஆனால் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வதென்று தெரியாது. இதை நம்புவதற்கு நமக்கு தயக்கம் ஏற்பட்டாலும், இந்த நிலை வரும் என்கின்றனர் நிபுணர்கள். அப்படி ஒரு நிலை ஏற்படும்போது உணவுக்காக பிற நாடுகளுடன் போரிட வேண்டிய கட்டாயத்திற்கு அரசாங்கம் தள்ளப்படும்.

தொழில்நுட்பங்களில் சிறந்து விளங்கும் சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளும், பெட்ரோல் போன்ற எரிபொருள் வளம் மிகுந்த அரபு நாடுகளும் 90 சதவீதத்துக்கும் அதிகமான உணவு பொருட்களை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கின்றன. இந்த நாடுகளில் உள்ள நிலங்களில் விவசாயம் செய்ய முடியாது. இயற்கையும் அதற்கு ஒத்துழைக்காது. உணவு பொருட்களை உற்பத்தி செய்த இந்தியா போன்ற விவசாய நாடுகளும் தற்போது தொழில்நுட்பத்திற்கு மாறி வருகிறது. இதனால் விவசாயம் தடைபடும்போது, உற்பத்தி பாதிக்கப்பட்டு ஏற்றுமதியும் தடைபடும். இதனால் உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்வதை இந்த நாடுகள் நிறுத்தும்போது, இதனால் பாதிக்கப்படும் வளர்ந்த நாடுகள், இந்த நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும்.

இயற்கையாகவே உள்ள விவசாய நிலங்களை வறண்ட நிலமாக மாற்றுவதற்கு 2 வாரங்கள் போதும். ஆனால் வறண்ட நிலத்தை விவசாய நிலமாக மாற்றுவதற்கு பல ஆண்டுகள் உழைக்க வேண்டும். இதையும் வரும் காலங்களில் செய்ய முடியாத அளவிற்கு இயற்கை மாறி விடும். இதை உணராமல் விவசாய நிலங்களையும், வனங்களையும் இன்றைய தேவைக்காக அழித்து வருகிறோம்.

ஆசியா, ஆப்ரிக்காவில் அதிக பாதிப்பு

உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்டவர்கள், ஆசிய கண்டத்தில் வசிக்கின்றனர். உணவு தட்டுப்பாட்டால் அதிகம் பாதிக்கும் நாடுகளும் ஆசியாவில்தான் இருக்கும்.
ஆப்ரிக்காவில் 40 சதவீத விவசாய இடங்கள் முற்றிலும் காணாமல் போய்விட்டது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் ஆப்ரிக்கா கண்டத்தில் 2025ம் ஆண்டில் 25 சதவீத மக்களுக்கு மட்டுமே உணவு பொருட்கள் கிடைக்கும் என்று கானா நாட்டில் உள்ள யூ.என்.யூ என்ற அமைப்பு அறிவித்துள்ளது.

மீண்டும் காலனி ஆதிக்கம்

வளர்ந்த நாடுகள், பிற நாடுகளில் நிலங்களை வாங்கி பயன்படுத்துவதால் மீண்டும் காலனி ஆதிக்கம் ஏற்படும் என ஜேக்யூ டயோப் என்ற வரலாற்று ஆசிரியர் எச்சரித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‘‘தங்கள் நாடு வறுமையில் வாடும்போது, வெளிநாட்டினரின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் மட்டும் உணவு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும். இதனால் மக்கள் கலவரத்தில் ஈடுபட்டு உணவு பொருட்களை கைப்பற்றுவார்கள். இந்த பிரச்னை வளர்ந்து போரில் முடியும். பின்னர் வளர்ந்த நாடுகள் தங்கள் நாட்டு மக்களின் தேவைக்காக ஏழை விவசாய நாடுகளை ஆக்கிரமிக்கும் போரில் ஈடுபடும். வெளிநாடுகளில் லீசுக்கு இடங்களை வாங்கியுள்ள அரபு நாடுகள், அதற்கு பதிலாக பெட்ரோல், காஸ் போன்ற எரிபொருட்களைதான் கொடுக்கின்றனர். பண்டைய காலங்களில் வணிகம் செய்ய வந்த இங்கிலாந்து நாட்டினர், இதேபோல பண்டமாற்று முறையில்தான் நாட்டையே அடிமைப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக வங்கி எச்சரிக்கை

உணவுப் பொருட்கள் விலை ஆபத்தான அளவிற்கு உயர்ந்து வருகிறது. மளிகை பொருட்களுடன் காய்கறி விலைகளும் உயர்ந்து விட்டதால், கடந்த 7 மாதத்தில் மட்டும் வளரும் நாடுகளில் 4.4 கோடி பேர் வறுமை கோட்டுக்கு கீழ் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இது கவலை அளிக்கும் செய்தி என்று உலக வங்கி தலைவர் ராபர்ட் ஜோலிக் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலும் லீசுக்கு இடம்

அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் (ஆம்வே) இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நிலங்களை பல ஆண்டுகளுக்கு லீசுக்கு எடுத்துள்ளது. இங்கு விவசாயம் செய்து அதிலிருந்து கிடைக்கும் பொருட்களை கொண்டு சோப்பு, முக அழகு கிரீம், டூத் பேஸ்ட் மற்றும் வாசனை திரவியங்களை தயாரித்து உலகம் முழுவதும் விற்பனை செய்கிறது.

கருகிப்போன பூமி பந்து

1969ம் ஆண்டு நிலாவுக்கு சென்ற நீல்ஆம்ஸ்ட்ராங், நிலாவில் இருந்து பூமியை பார்க்கும்போது பச்சை நிற பந்துபோல தெரிகிறது என்றார். ஆனால் இப்போது விண்வெளிக்கு சென்று திரும்பியவர்கள், தீயில் கருகிப்போன பந்து மாதிரி பூமி தெரிகிறது என்கின்றனர். கடந்த 40 ஆண்டுகளில் உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இயற்கையை வேகமாக அழித்து வருகின்றன.

வெளிநாட்டில் வாடகைக்கு விவசாய இடம்

சவுதிஅரேபியாவில் விவசாய நிலங்களே இல்லை என்பதால், ஆப்பிரிகா கண்டத்தில் உள்ள கென்யா என்ற ஏழை நாட்டில் பல லட்சம் ஹெக்டேர் நிலங்களை லீசுக்கு எடுத்துள்ளன. அங்கு விவசாயம் செய்து அதில் கிடைக்கும் உணவு பொருட்களை தங்கள் நாட்டிற்கு கொண்டு செல்கின்றன. ஆசியாவுக்கும், ஆப்பிரிக்காவுக்கும் இடையில் உள்ள மடகாஸ்கர் தீவை தென்கொரியா லீசுக்கு எடுத்து மக்காச்சோளம் பயிரிட்டு, அதிலிருந்து பயோ ப்யூல் தயாரித்து தங்கள் நாட்டிற்கு கொண்டு செல்கின்றனர். உக்ரைனில் 2.5 லட்சம் ஹெக்டேர் நிலங்களை லிபியா லீசுக்கு எடுத்துள்ளது. இதேப்போல, சூடான், எத்தியோப்பியா, எகிப்து, கசகஸ்தான், கம்போடியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் தங்கள் நாடுகளில் உள்ள விவசாய இடங்களை வெளிநாடுகளுக்கு லீசுக்கு கொடுத்துள்ளன. இதேப்போல பல அரபு நாடுகள் வெளிநாடுகளில் இடங்களை வாங்கி விவசாயம் செய்கின்றன. மேலும் பல நாடுகள் வெளிநாடுகளில் இடங்களை வாடகைக்கு பிடிக்க மிகப்பெரிய திட்டங்களை தயாரித்துள்ளன.

60 லட்சம் குழந்தைகள் பலி

அமெரிக்க டாலரின் மதிப்பு குறைவு, கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகிய இரண்டும் உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு அடிப்படைக் காரணம். விலை 2 சதவீதம் கூடும்போது ஒவ்வொரு முறையும் ஒரு சதவீத மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் தள்ளப்படுகின்றனர் என்று ‘யுனிசெப் ‘ அறிவித்துள்ளது. உணவு பொருட்களின் கடுமையான விலை உயர்வு, தட்டுப்பாடு மற்றும் வறுமையால் உலகில் ஆண்டுக்கு 60 லட்சம் குழந்தைகள் இறக்கின்றனர். ஒரு நாளில் மட்டும் 17 ஆயிரம் குழந்தைகள் இறக்கின்றனர். 80 கோடி பேர் சத்துக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ‘யுவான்’ என்ற ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.


Thanks To Mr.Ghouse Cuddalore Port

கருத்துகள் இல்லை: