OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 28 நவம்பர், 2011

இளமையில் கல்…




இளமையில் கல்…
உலகின் மிகப்பெரும் பொருளாதார ஜாம்பவானாக சீனா மாறி வருவதை அனைவரும் அறிவோம். அதே சீனாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஸிங்ஸியாங் மாகாணத்தில் நடத்தப்பட்டு வரும் அரசு வன்முறைகளை பெரும்பான்னையினர் அறிவதில்லை. பத்திரிகை செய்திகள், சீனாவில் இருந்து வரும் மக்கள் தரும் தகவல்கள் மூலமாக அங்கு முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டு வரும் அநியாயங்களை நாம் சிறிது அறிகிறோம்.
சமீபத்தில் ஸிங்ஸியாங் மாகாண முஸ்லிம்கள் குறித்து வந்த ஒரு மின்னஞ்சலில் உள்ள செய்தி அதிசயமாகவும் அதே சமயம் வேதனையாகவும் இருந்தது.
பதினெட்டு வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் மஸ்ஜித்களுக்கு செல்வதோ அல்லது மார்க்க கல்வி கற்கவோ கூடாது என்பதில் அரசாங்கம் மிகவும் கவனமாக உள்ளது என்பதுதான் அந்த செய்தி. மஸ்ஜித்களுக்கு செல்லும் மாணவர்களை கண்காணிப்பதற்கு சிறப்பு உத்தரவுகளும் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதனால் கலக்கமுற்றுள்ள மாணவர்கள் மஸ்ஜித்களுக்கு செல்வதற்கே மிகவும் தயங்குகின்றனர். அது மட்டுமல்லாமல், தங்களின் வீடுகளில் தொழுவதற்கு கூட அவர்கள் மிகவும் தயங்குகின்றனர். எங்கே தாங்கள் வீடுகளில் தொழுவதை யாரேனும் கண்டுவிட்டால், பள்ளிக்கூடங்களில் இருந்து தங்களை நீக்கி விடுவார்களோ என்ற அச்சம்தான் இவர்களை தொழுகையை விட வைக்கிறது.
ஆக முற்றிலும் இஸ்லாத்தை அறிந்து கொள்ளாத, இஸ்லாத்தை தங்கள் வீடுகளில் கூட பின்பற்றாத ஒரு சமுதாயத்தை உருவாக்குவதில் அரசாங்கள் மிகவும் கவனமாக உள்ளது. இஸ்லாத்தை அறிந்து கொள்ளாத இவர்களை அறியாமையிலும் பயத்திலும் எப்போதும் வைத்திருக்க வேண்டும், அதன் மூலம் தங்களின் சுரண்டல்களையும் அடக்குமுறைகளையும் தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் கணக்கு.
எங்கோ சீனாவின் ஸிங்ஸியாங் பிரதேசத்தில் நடைபெற்று வரும் நிலையை குறித்து சிந்தித்து கொண்டிருக்கும் போதே நமது உள்ளூர் நிலைமையும் நினைவிற்கு வந்தது. ஸிங்ஸியாங் பிரதேசத்தை போன்று மஸ்ஜித்களுக்கு செல்லக்கூடாது என்றோ மார்க்க கல்வி கற்க கூடாது என்றோ நமக்கு எவரும் தடைகளை விதிக்கவில்லை. ஆனால் தற்போதுள்ள தலைமுறையினர் இவற்றை விட்டும் விலகியே இருக்கின்றனர் என்பதுதானே உண்மை.
இருபது வருடங்களுக்கு முன்னர் காலையிலும் மாலையிலும் சாரை சாரையாக கையில் குர்ஆனுடன் மதரஸாக்களுக்கு செல்லும் குழந்தைகளை நம்மால் காண முடியும். அனைத்து மஸ்ஜித்களிலும் உள்ள மதரஸாக்களில் குழந்தைகளின் கூட்டம் அலை மோதும். ஒரு நாள் மதரஸா செல்லவில்லை என்றாலும் வீட்டிலும் மதரஸாவிலும் உள்ள கண்டிப்பை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. அங்கே குர்ஆனுடன் இணைத்து ஒழுக்கமும் ஒரு சேர கற்று கொடுக்கப்பட்டது. இஸ்லாத்தின் அடிப்படைகள் கற்று கொடுக்கப்பட்டன. அது மட்டுமா, இன்று மேடைகளில் முழங்கும் எத்தனையோ பேச்சாளர்கள் அன்று முதலில் முழங்கியது அந்த வகுப்புகளில் தானே!
இந்த சிந்தனையில் வளர்க்கப்பட்ட தலைமுறை இஸ்லாத்தை மேலும் கற்பதில் ஆர்வம் காட்டியது. அத்துடன் கற்ற இஸ்லாத்தை தனது வாழ்க்கையிலும் பிரதிபலித்தது. இஸ்லாத்தை கற்ற இந்த தலைமுறையிடம் ஒழுக்க வீழ்ச்சியும் கிடையாது, கோழைத்தனமும் கிடையாது, ஏமாற்றும் கிடையாது. பள்ளிக்கூடங்களுக்கு இணையாக இருந்த அந்த மதரஸாக்கள் மக்களை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தன என்பதை எவரும் மறுக்க முடியாது.
ஆனல் இன்று நிலை என்ன? அவசரமும் போட்டியும் நிறைந்த உலகில் இந்த மதரஸாக்கள் எங்கே சென்றன என்பதே தெரியவில்லை. உலக கல்வியின் மீதுள்ள மோகம் குர்ஆனை அறியாத ஒரு தலைமுறையை உருவாக்கி வருகிறது. குழந்தைகளில் கல்விக்காக சொந்த ஊரை விட்டு வெளியூர்களுக்கு கூட செல்லும் நாம், மார்க்கத்தை கற்று கொடுப்பதற்கு சிறிதளவேனும் முயற்சி செய்கிறோமா என்பது கேள்விக்குறிதான். மதரஸாக்களில் செல்லாத இவர்களிடம் ஒழுக்க வீழ்ச்சியும், சுயநலமும், கோழைத்தனமும் தான் மிஞ்சியிருக்கும். இத்தகைய ஒரு தலைமுறையால் குடும்பத்திற்கோ சமுதாயத்திற்கோ எவ்வித பலனும் இல்லை.
இளமையில் கற்கும் கல்விதான் ஒரு மனிதனை வார்த்தெடுப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன என்பதை அனைவரும் அறிந்தே உள்ளோம். ஒழுக்கமுள்ள தலைமுறையை உருவாக்குவதற்கு நமது குழந்தைகளின் கைகளில் குர்ஆன் தவழ வேண்டும். இதனை அடைவதற்கு மூடப்பட்ட மதரஸாக்கள் திறக்கப்பட வேண்டும்.

நன்றி: ஏர்வை ரியாஸ் .

கருத்துகள் இல்லை: